3531. |
ஏதமில
பூதமொடு கோதைதுணை |
|
யாதிமுதல்
வேதவிகிர்தன்
கீதமொடு நீதிபல வோதிமற
வாதுபயி னாதனகர்தான் தாதுபொதி
போதுவிட வூதுசிறை
மீதுதுளி கூதனலியக்
காதன்மிகு சோதிகிளர் மாதுபயில்
கோதுகயி லாயமலையே. 6
|
6.
பொ-ரை: குற்றமில்லாத பூதகணங்கள் சூழ்ந்திருக்க, உமா
தேவியைத் துணையாகக் கொண்டு, ஆதிமூர்த்தியாகிய
சிவபெருமான், வேதங்களை இசையோடு பாடியருளி, அதன்
பொருளையும் விரித்து, நீதிக்கருத்துக்கள் பலவற்றையும் ஓதியவன்.
தேவர்களாலும், முனிவர்களாலும், அடியவர்களாலும் நாள்தோறும்
மறவாது வணங்கப்படும் தலைவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, மகரந்தப்பொடிகளைத் தன்னுள் அடக்கிய அரும்பு மலர,
தேனை ஊதி உறிஞ்சிய சிறகுகளையுடைய வண்டுகள் தம்மேல்
சிதறிய தேன்துளிகளால் குளிர் வருத்த, அன்புமிக, ஒளிர்கின்ற,
அழகிய குயில்கள் தளிர்களைக் கோதும் திருக்கயிலாய மலையாகும்.
கு-ரை:
ஏதமில - குற்றமில்லாதனவாகிய. பூதமொடு -
பூதங்களோடு. கோதை - அம்பிகைக்கு, துணை - துணையாகிய,
ஆதி முதல் - பழமையாகிய முதற்கடவுள். வேதவிகிர்தன் -
வேதத்திலே எடுத்துக் கூறப்படும் வேறுபட்ட தன்மையையுடையவன்.
ஓதி - ஓதி அருளியவன். மறவாது பயில் நாதன் -தேவர் முனிவர்
முதலியோர் தன்னை மறவாமல் நாடோறும் வந்து வணங்கப் பெற்ற
தலைவனாகிய சிவபெருமானது; நகர்தான் - தலமாவது. தாது
-மகரந்தப்பொடிகளை, பொதி - அடக்கிய, போது-அரும்புகள்.
விட-மலர், ஊது -ஊதுகின்ற, சிறை - சிறகுகளையுடைய வண்டுகள்.
மீது-தமது மேல் சிதறிய. துளி -தேன்துளிகளால், கூதல் - குளிர்.
நலிய - வருத்த(வும்) காதல் மிகு -(அச்சோலையின் கண்ணே
தங்குவதற்கு) அன்பு மிகும், சோதி கிளர் - ஒளி பிரகாசிக்கின்ற,
மாது பயில் - அழகுதங்கிய, கோது - குயில்கள் தளிர்களைக்
கோதும்; கயிலை மலையே.
|