3534. பரியதிரை யெரியபுனல் வரியபுலி
       யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு
     புரிவினவர் பிரிவினகர்தான்
பெரியவெரி யுருவமது தெரியவுரு
     பரிவுதரு மருமையதனால்
கரியவனு மரியமறை புரியவனு
     மருவுகயி லாயமலையே.           9

     9. பொ-ரை: சிவபெருமான் நெருப்பையும், பெரிய
அலைகளையுடைய கங்கையையும் கொண்டவர். வரிகளையுடைய
புலித்தோலை ஆடையாக அணிந்தவர். கீற்றுக்களையுடைய
வளையல்களை அணிந்த செவ்வரி படர்ந்த கண்களையுடைய
உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு
பிரிவில்லாது வீற்றிருந்தருளும் இடமாவது, சிவபெருமான் பெரிய
சோதிப்பிழம்பாய் நிற்க அதன் அடியையும், முடியையும்
தேடத்தொடங்கிக் காண்பதற்கரியதாய் விளங்கியதால் நீலநிறத்
திருமாலும், அருமறைகள் வல்ல பிரமனும் தவறுணர்ந்து மன்னிப்பு
வேண்டும் பொருட்டுப் பொருந்திய திருக்கயிலாய மலையாகும்.

     கு-ரை: பரிய திரை - பருத்த அலைகளையுடைய, எளிய -
அக்கினி தோன்றுவதற்கு இடமாகிய, புனல் - கங்கைநீரும், வரிய -
வரிகளையுடைய, புலியுரியது - புலியின் தோலாகிய, உடை -
ஆடையையும், (கொண்ட) பரிசையுடையான் - தன்மையையுடைவன்.
வரிய - கீற்றுக்களையுடைய, வளை - வளைகளையணிந்த, அரிய -
செவ்வரியுடைய, கணி -கண்ணி(உமாதேவியாரின்) உருவின்
ஒடு-உடம்போடு, புரிவின் அவர்-கலத்தலையுடைய அச்
சிவபெருமான்; பிரிவு இல் நகர்தான் - பிரியாத தலமாவது, பெரிய
- மிகப்பெரியதாகிய, எரி உருவம் அது - தீயாகிய வடிவத்தை,
தெரிய - தேடத் தொடங்க, உரு - அவ்வடிவம். பரிவு தரும்
-துன்பத்தைத் தரக்கூடிய, அருமை அதனால் - அரிய தன்மை
உடைமையினால், கரியவனும் - திருமாலும், (அரிய) மறை -
வேதத்தை. புரியவனும் - விரும்புகின்ற பிரமனும், மருவு -
(மன்னிப்பு வேண்டும் பொருட்டு) பொருந்திய கயிலாய மலையே.