3538. முதுசினவி லவுணர்புர மூன்றுமொரு
       நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர்
     விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய வெழுபொறிகள்
     சிதறவெழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிக ளிருளகல
     நிலவுகா ளத்திமலையே.               2

     2. பொ-ரை: மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக்
கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப்
பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான். அவர்
சந்திரனைத் தரித்த சடையையுடையவர். எல்லா உயிர்கட்கும்
நன்மையே செய்பவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை,
எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப்
பொறிகளாலும், பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது
கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி
மலையாகும்.

     கு-ரை: முது - பழமையான(வில்). சினம் - கோபத்தையுடைய.
வில் -வில்லினால். அவுணர் புரம் மூன்று - அசுரர்கள் புரம்
மூன்றும். ஒரு நொடி வரையில் - ஒரு நொடிப் பொழுதில். மூள -
எரிமூளும் படியாக. எரிசெய் -எரித்த. சதுரர் - சமர்த்தர். மதி -
சந்திரன். பொதி - தங்கிய. சடையர் -சடாபாரத்தையுடையவர்.
சங்கரர் - ஆன்மாக்களுக்கு நன்மையைச்செய்பவர். (விரும்பும்
மலை)

     எதிர்எதிர - எதிர்எதிர் உள்ளனவாகிய. வெதிர் பிணைய
- மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று மோத(உராய). எழு - உண்டான.
பொறிகள் - நெருப்புப் பொறிகள். (சிதற, அவற்றாலும்). ஏனம்
உழுத - பன்றிகள் கொம்பினால் கிளறுவதால் தோன்றிய. கதிர்
மணியின் வளர் ஒளிகள் - ஒளியையுடைய இரத்தினங்களின்
மிகும் ஒளியினாலும். இருள் அகல-இருள் நீங்க, நிலவு-
விளங்குகின்ற; காளத்திமலை.