3549. |
அந்தண்மதி
செஞ்சடைய ரங்கணெழில் |
|
கொன்றையொ
டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது
வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும்
வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர்
சிந்துமயி லாடுதுறையே. 2 |
2.
பொ-ரை: சிவபெருமான் அழகிய குளிர்ந்த சந்திரனை
அணிந்த சிவந்த சடையையுடையவர். அச்சடையிலே அழகிய
கொன்றை மாலையை அணிந்த அழகரான எம் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இனிய இடம் திருமயிலாடுதுறை என்னும்
திருத்தலமாகும். அத்திருத்தலமானது மணம் கமழும்
சந்தனமரங்களோடு, கரிய அகில் மரங்களையும் வாரிக் கொண்டு
வரும் காவிரியின் அலைகள் தம்மேல் நீர்த்திவலை வீசுவதால்,
அதனைக் கோபித்து அதற்கு எதிராக, கரையோரத்துச்
சோலைகளிலுள்ள குரங்குகள் மலர்களை வீசுகின்ற தன்மையுடன்
திகழ்வதாகும்.
கு-ரை:
அந்தண்மதி - அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த.
(செஞ்சடையர்). அங்கண் - அந்தச் சடையினிடத்தில். எழில் -
அழகிய. கொன்றையொடு-கொன்றை மாலையோடு. அணிந்து - சூடி.
அழகராம் - அழகராகிய. எந்தம் அடிகட்கு - எமது கடவுளாகிய
சிவபெருமானுக்கு. இனிய - விருப்பமான. தானம் அது - இடமாவது.
வேண்டில் - எது என அறிய வேண்டுவீரேல், எழிலார் பதியதாம்;
அழகு மிக்க பதி அது ஆகும். (மயிலாடுதுறை) கந்தம் மலி -
வாசனை மிகுந்த. சந்தினொடு - சந்தன மரங்களோடு. கார்
அகிலும் - கரிய அகில் மரங்களையும். வாரிவரு - வாரிக்கொண்டு
வருகின்ற. காவிரி உள் - காவிரி நதியில். வந்ததிரை - வந்த
அலைகள். உந்தி - தம்மேல் நீர்த்திவலை வீசுவதால். எதிர -
அதற்கு எதிராக. மந்தி - கரையோரத்துச் சோலைகளிலுள்ள
குரங்குகள். மலர் சிந்து - மலர்களை வீசுகின்ற. மயிலாடுதுறை.
தம்மீது திவலை சிந்திய காவிரியைக் கோபித்து, மந்திகள்
அதற்கு எதிராக மலர்களை வீசுகின்றன எனத் தலத்தின் வளம்
கூறியவாறு. உந்தி - உந்த. வினையெச்சத்திரிபு.
|