3558. நிணந்தரு மயானநில வானமதி
       யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக
     வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம்
     பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய்
     வார்பெறுவர் பொன்னுலகமே.         11

     11.பொ-ரை: இறந்தார் உடலின் கொழுப்புப் பொருந்திய
சுடுகாட்டில், பூவுலகிலும், வானுலகிலும் உள்ள வீரர் எவரையும்
பொருட்படுத்தாத சிறப்புடைய சூலப்படையோடு, பேய்க்கூட்டங்கள்
தொழ, பிரமகபாலத்தை ஏந்தியுள்ள சிவபெருமானின் திருவடிகளை
வணங்கி மிக்க அன்புடன், நறுமணமும், குளிர்ச்சியும் பொருந்திய
சீகாழியில் அவதரித்த வேதங்களின் உட்பொருளை நன்குணர்ந்த
ஞானசம்பந்தன், திருமயிலாடுதுறையைப் போற்றிப்ப பாடிய
இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் இசையோடு பாடுகிறவர்கள்
சொர்க்கலோகம் அடைவர்.

     கு-ரை: நிணந்தரு - இறந்தார் உடவின் கொழுப்புப்
பொருந்திய, மயானம் - சுடுகாட்டில், நிலம், வானம், மதியாததொரு
சூலமொரு - பூவுலகிலும், வானுலகிலும் உள்ள வீரரெவரையும்
பொருட்படுத்தாததாகிய ஒரு சூலத்தோடு, பேய்க்கணம் தொழு -
பேய்க்கூட்டம் தொழும் கபாலி. பிரமகபாலத்தை ஏந்தும்
சிவபெருமானது - கழல் ஏத்தி - திருவடியைத் துதித்து, மிக
வாய்த்ததொரு காதன்மையினால் - மிகப் பொருந்திய ஒப்பற்ற
அன்பினால், மணம் தண் மலிகாழி - மணமும் களிச்சியும மிகுந்த
சீகாழியில் (அவதரித்த) மறை - வேதங்களை உணர்ந்த.
ஞானசம்பந்தன் - (மயிலாடுதுறையில் புணர்ந்த தமிழ்;) இசையால்
உரை செய்வார் - இசையொடு பாடுகிறவர். பொன்னுலகமே
பெறுவார் - சொர்க்கலோமே அடைவார்கள். புணர்ந்த பிறவினை
விகுதி குன்றியது.