3566. கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ
       டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ
     கன்றனிடமாம்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு
     திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில்
     வைகாவிலே.                         8

     8. பொ-ரை: இருபது கைகளும், வலிமையான உடம்பும்
துன்புறும்படி பெரிய கயிலைமலையைப் பெயர்த்த தீயோனான
இராவணனின் பத்துத் தலைகளையும் ஒருங்கே நெரித்த அழகனான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இவ்வையகத்திலுள்ள
அடியவர்கள் பலர் கையில் மலர் கொண்டு, காலையும், மாலையும்
தியானித்து, பக்தியுடன் பலவிதத் தோத்திரங்களைப் பாடி வணங்கிப்
போற்றுகின்ற அழகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: விலங்கலை (கயிலை) மலையை (எடுத்த) கடியோன்
- தீயோனாகிய இராவணன், (கை இருபதோடும்) மெய் - உடம்பு.
கலங்கிட - குழம்ப. ஐ இருசிரங்களை - பத்துத் தலைகளையும்,
ஒருங்கு உடன் - ஒருசேர. நெரித்த - அரைத்த. (அழகன் தன்
இடம் ஆம்)

     வையகம் எல்லாம் - உலகம் முழுவதும். மருவி -
வந்து தங்கி, ந(ல்)ல காலையொடு - அதிகாலை வேளையிலும்.
மாலை - மாலை வேளையிலும். கருதி - தியானித்து, (கையில்
மலர் கொண்டு) பல விதம் நின்று தொழுது ஏத்து - பலவிதமாக
நின்று தொழுது துதிக்கும். எழில் - அழகினையுடைய, வைகாவில்.