3569. முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை
            காவிலதனை
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம்
     பந்தனு ரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ
     ருருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ
     ரும்புகழொடே.                   11

     11. பொ - ரை: முழுவதுமாய் நம்மை ஆட்கொண்ட
முக்கண்ணுடைய முதல்வனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருவைகாவில் என்னும் திருத்தலத்தைப் போற்றி,
தன்னையடைந்தோர் வினைகளை அழிக்கும் சிரபுரத்தில் அவதரித்த
தலைவனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்பாக்கள்
பத்தினையும் ஓத வல்லவர்கள் உருத்திரர்களாகிச் சிவலோகத்தில்
முத்தியின்பத்தில் இருந்து பிரியாது புகழுடன் வாழ்வர்.

     கு - ரை: செற்ற - மிகுத்த. ம(ல்ல)லின் - வளங்களால்,
ஆர் - நிறைந்த (செற்ற - தன்னையடைந்தோர் வினைகளை
அழித்த, எனினும் ஆம்.) சிரபுரத்தலைவன் - சீகாழித் தலைவராகிய,
ஞானசம்பந்தர், உருத்திரர் எனப்பெற்று அமரலோக மிக உருத்திரர்
ஆகி சிவலோகத்தில். பெரும் புகழோடு - பெரிய
புகழ்ச்சிக்குரியதாகிய முத்தியின்போடு, பிரியார் - நீங்காதவராகி மிக
வாழ்வார் என்க. அமரன் - (சாவாதவன்) சிவபெருமான்
ஒருவர்க்கேயுரியது. “செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று, பத்தி
செய் மனப்பாறைகட்கேறுமோ” என்பதும் “சாவா மூவாச் சிங்கமே”
என்பதும் அப்பமூர்த்திகள் திருவாக்கு. (திருக்குறுந்தொகை:
திருத்தாண்டகம்). ஆகையால் அமரலோகம் என்பது
சிவலோகத்தைக் குறிக்கும்.