3589. தூயமல ரானுநெடி யானுமறி
       யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி
     வாரணிகொண் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத
     னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தவெளி
     தாகுநல மேலுலகமே.         9

     9. பொ-ரை: தூய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும்,
திருமாலும் சிவபெருமானுடைய தோற்றத்தையும், பலவகையான
நிலைகளையும் அறியாதவர்களாயின் வேறுயார்தான் அவற்றை
அறிவர்? அழகிய அகன்ற மார்பு முழுவதும் திருநீற்றினை அணிந்து
உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளுகின்ற திருப்பட்டீச்சரம்
என்னும் திருக்கோயிலை அடைந்து அவன் இரு திருவடிகளைப்
போற்றி வணங்கச் சிவஞானம் பெறுதலும், அதன் பயனால்
முக்தியுலகை அடைதலும் எளிதாகும்.

     கு-ரை: தூயமலரானும் நெடியானும் - தூய்மையாகிய தாமரை
மலரில் இருப்பவனாகிய பிரமனும் திருமாலும். அவன் -
அவ்விறைவனுடைய. தோற்றம் - தோற்றத்தையும். நிலையின் -
நிலைமையின். ஏய - பொருந்திய. வகையானதனையும் -
வகையையும் (பலவகையான நிலைமையையும்) அறியார்
- அறியாதவர்களாவார்கள். (ஆயின்) யார் அது அறிவார் -
அவரது தோற்றத்தையும் நிலமையையும் அறியவல்லவர்கள் யார்?
அணிகொள் மார்பின் அகலம் - அழகான மார்பின் அகன்ற
இடத்தில். பாய - முழுவதும். (நல்ல) நீறு அது அணிவான் -
திருநீற்றை அணிபவனுமாகிய சிவ பெருமான். உமைதனோடும்
உறை - உமாதேவியோடும் தங்கும், (பட்டீசரமே) மேய் - அடைந்து.
(மேவியவனது) ஈரடியும் ஏத்த - இரண்டு திருவடிகளையும் துதிக்க.
எளிதாகும் நலம் - சிவஞானம் அடைதல் எளிதாகும்.
(அதன்பயனாக அடைய வல்லது) மேல் - மேலான. உலகமே -
முத்தியுலகாம்.அடைதல் எளிதாகும். (அதன்பயனாக அடைய
வல்லது) மேல் - மேலான. உலகமே - முத்தியுலகாம்.