3604. அங்கம்விரி துத்தியர வாமைவிர
       வாரமமர் மார்பிலழகன்
பங்கய முகத்தரிவை யோடுபிரி
     யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரை கொணர்ந்துபவ
     ளத்திரள் பொலிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள்
     பிறங்கொளிகொள் சண்பைநகரே.     2

     2. பொ-ரை: திருமேனியிலே பரந்த புள்ளிகளையுடைய
பாம்பையும், ஆமையோட்டையும் கலந்த மாலையாக மார்பிலே
விரும்பியணிந்த அழகனாகிய சிவபெருமான், தாமரை மலர்போன்ற
முகத்தையுடைய உமாதேவியாரோடு பிரியாது வாழ்கின்ற தலமாவது,
பொங்கியெழும் கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து குவிக்கின்ற
பவளத்திரள்களின் பக்கத்திலே, வலம்புரிச் சங்குகளும், சிப்பிகளும்
சொரிந்த முத்துக் குவியல்களின் மிகுதியான பிரகாசத்தைக் கொண்ட
திருச்சண்பை நகராகும்.

     கு-ரை: அங்கம் - உடம்பில், விரி - பரந்த. துத்தி -
புள்ளிகளையுடைய. அரவு - பாம்புகளையும். ஆமை -
ஆமையோட்டையும். மார்பில். விரவு - கலந்த. ஆரம் - ஆரமாக.
அமர் - விரும்பும். அழகன் - சிவபெருமான். பங்கயம் -
தாமரைபோன்ற. முகத்து - முகத்தையுடைய. அரிவையோடு -
உமாதேவியாருடன். பிரியாதுபயில் - பிரியாமல் வாழ்கின்ற. பதி -
தலம். பொங்கு - மிகுந்த. பரவைத்திரை - கடலலைகள்.
கொணர்ந்து - அடித்துக் கொண்டுவரக் (குவிந்த) பவளத்திரள் -
பவளக்குவியல்களின். அயலே - பக்கத்தில். சங்கு - சங்குகளும்.
புரி - வலமாகச் சுற்றிய. இப்பி - சிப்பிகளும். (சொரிந்த)
தரளத்திரள் - முத்தின் குவியல்கள். பிறங்கு - சிவப்பும்.
வெண்மையும் கலந்து விளங்கும். ஒளிகொள் - பிரகாசத்தைக்
கொண்ட; சண்பை நகரே.