3613. வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு
       சங்கரன் மகிழ்ந்தமரு
மூர்சாரின்முர றென்கடல் விசும்புற
     முழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ்
     ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர்
     சேர்வர்சிவ லோகநெறியே.            11

     11. பொ-ரை: கச்சணிந்த கொங்கைகளையுடைய
உமைநங்கையோடு எவ்வுயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற
சங்கரன் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து
வீற்றிருந்தருளும் தலமாவதும், வீதிகள் முதலிய இடங்களில்
கடலோசைபோல் முழங்குகின்ற பேரொலியானது, வானுலகைச்
சென்றடையுமாறு உள்ளதும் ஆகிய திருச்சண்பை நகரைப் போற்றி,
இப்பூவுலகில் நிலைத்த புகழுடைய தமிழ் ஞானசம்பந்தன் அருளிய
சிறப்புடைய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாடுகிறவர்கள்
சிவலோகத்தை அடைவர்.

     கு-ரை: வாரின்மலி - கச்சையணிந்த. நங்கை - மகளிற்
சிறந்தவள். சங்கரன் - நன்மையைச் செய்பவனாகிய சிவபெருமான்.
மகிழ்ந்து அமரும் ஊர் - மகிழ்ந்து வீற்றிருக்கும் தலமாகிய. சாரின் -
வீதி முதலிய இடங்களில் எல்லாம். தெண்கடல் - தெளிவாகிய
கடல்போல. முரல் - ஒலிக்கின்ற. முழங்கு ஒலி -பேரோசையானது.
விசும்பு உறக்கொள் - வானுலகை யடையுமாறு கொண்ட
(சண்பைநகர் மேல்). பாரில் - பூமியில். மலிகின்ற - மிகுந்த.
புகழ்நின்ற - புகழ் நிலைத்துநின்ற (தமிழ் ஞானசம்பந்தன்) உரை
செய் - பாடிய. சீரின்மலி - தாளவொத்துக்களுக்கு இசைந்த.
(செந்தமிழ் இசைப் பாடல்களை.) செப்பும் அவர் - பாடுவோர்.
சிவலோக நெறி சேர்வர் - முறையே சிவலோகம் சேர்வர்.