3622. வாசமலர் மேவியுறை வானுநெடு
       மாலுமறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதவம ணாதரொடு
     தேரர்குறு காதவரனூர்
காசுமணி வார்கனக நீடுகட
     லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை
     பேசுமெழில் வேதவனமே.              9

     9. பொ-ரை: நறுமணம் கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும் அறியாத சிவன் பெருமையைப் பழிப்பதற்குக்
கூசாத பயனிலிகளாகிய சமணர்களுடன், பௌத்தர்களும் அடையாத
சிவபெருமான் வீற்றிருக்கும் தலமாவது செம்படவர்கள் பெரிய
கடலலைகள் ஓடிவரும்போது வலையை வீசி, அவை கொணர்கின்ற
இரத்தினங்களையும், மணிகளையும் சிறந்த பொன்னையும் வாரி
விலைபேசும் அழகிய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: மலர் மேவி உறைவானும் - தாமரை மலரில் தங்கி
வசிப்பவனாகிய பிரமனும். நெடுமாலும் - திருமாலும். அறியாத -
அறியாததாகிய. நெறி - சிவன் பெருமையை. கூசுதல் செயாத -
பழிப்பதற்குக் கூசாத, அமண் ஆதரோடு - பயனிலிகளாகிய
சமணர்களுடன். தேரர் - பௌத்தர்களும். குறுகாத - அடையாத.
அரன் - அச்சிவபெருமானது. (ஊர்) நீடு - நெடிய. கடல் - கடலில்.
ஓடு - ஓடிவருகின்ற. திரை - அலைகள். வார் - சொரிகின்ற.
துவலைமேல் - திவலைகளின்மேல், (வலையைவீசுகின்ற)
வலைவாணர் -செம் படவர்கள். காசு - இரத்தினங்களையும். மணி -
முத்துக்களையும். வார்கனகம் - மிக்க பொன்னினையும். (வாரி விலை
பேசும்) எழில் - அழகிய (வேதவனம்).