3633. மொட்டையம ணாதர்முது தேரர்மதி
 

     யில்லிகண் முயன்றனபடும்
முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய்
     யாதமுதல் வன்றனிடமாம்
 மட்டைமலி தாழையிள நீர்முதிய
     வாழையில் விழுந்தவதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர
     வேறுதவி மாணிகுழியே.               10

     10. பொ-ரை: மொட்டைத் தலையுடைய சமணர்களும்,
பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள்.
முயன்று செய்த வினைகளே பயன்தரும். அதற்குக் கர்த்தாவேண்டா
என்று சொல்பவர்கள் அவர்கள். உருட்டிய வழி உருளும். முட்டை
போல் தமக்கென ஓர் உறுதி இல்லாத, அவர்கள் சொன்ன
சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, மட்டைகளையுடைய தென்னைகளின்
இளநீர்கள் வாழையிலும், பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள்
சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும்.

     கு-ரை: மொட்டை - மொட்டைத் தலையையுடைய. அமண்
ஆதர் - சமணர்களாகிய அறிவிலிகளும். முது தேரர் -
பேதைமையின் முதிர்ந்த புத்தர்களுமாகிய, மதி இல்லிகள் -
புத்தியற்றவர்களும், முயன்றன படும் - முயன்று செய்த வினைகளே
பயன்தரும் (அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்லும்)
முட்டைகள் - உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர்
உறுதி இல்லாத அவர்கள். மொழிந்த மொழி கொண்டு - சொன்ன
சொற்களால், அருள் செய்யாத - அருள் புரியாத (முதல்
வன்றனிடமாம்,) மட்டை மலி தாழை - மட்டைகளையுடைய
தென்னைகளின். இளநீர் - இளநீர்கள். முதிய வாழையில் - முதிர்ந்த
வாழையில். விழுந்த அதரில் - விழுந்த வழியே. ஒட்டமலி -
வரிசையாக உள்ள: பூகநிரை - கமுகின் சோலைகளின். தாறு உதிர
- குலைகளில் உள்ள காய்கள் உதிரும் படியாக, ஏறு -
எற்றித்தாக்கும் (உதவிமாணிகுழியே.)