3642. உரக்கநெ ருப்பெழநெ ருக்கிவரை
       பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவனி சைக்கினிது
     நல்கியரு ளங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு
     மாடவரு மொய்த்த கலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை
     யுலாவுதிரு வேதிகுடியே.              8

    8. பொ-ரை: கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற
அரக்கனான இராவணனின் தலைகளையும், தோள்களையும்,
நெஞ்சிலும், கரத்திலும் நெருப்புப்போல வருத்துமாறு மலையின்கீழ்
அடர்த்து, பின் அவன் சாமகானம் இசைக்க அவனுக்கு ஒளி
பொருந்திய வெற்றிவாளையும், நீண்ட வாழ்நாளையும் அருளிய
பெருங்கருணையாளனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது,
கல்யாண முருங்கைப்பூப் போன்ற உதடுகளையுடைய, இளங்கொடி
போன்ற பெண்களும், ஆடவர்களும், நறுமணம் கமழும் கலவையைக்
கூந்தலில் தடவ, அதன் மணமானது விண்ணுலகிலும் பரவ விளங்கும்
திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வரை - கயிலை மலையை. பற்றிய - பேர்த்தெடுக்கத்
தொடங்கிய. ஒருத்தன் அரக்கனை - ஒரு அரக்கனாகிய
இராவணனது. முடிதோள் - தலையையும் தோளையும், உரம் கரம் -
நெஞ்சிலும் கைகளிலும், நெருப்பு எழ - நெருப்புக்கக்கும்படி,
நெருக்கி அடர்த்து - அழுந்த மிதித்து, (பின் அவன்) இசைக்கு -
இசைப்பாடலுக்கு, இனிது நல்கியருள் - (வாளும் - வாழ்நாளும்)
மகிழக்கொடுத்தருளிய. அங்கணன் - சிவபெருமானின் (இடம்,)
முருக்குஇதழ் - கல்யாண முருங்கைப் பூவையொத்த
அதரத்தையுடைய. மடக்கொடி - இளங்கொடிபோன்ற. மடந்தையரும்
- பெண்களும். ஆடவரும் - ஆண்களும். மொய்த்த - நிறையப்
பூசிய, கலவை - கலவைச் சந்தனத்தின். விரை - வாசனையும். குழல்
- மாதர் கூந்தலின். மிகக் கமழ - மிகவும் மணம் வீச, (அது) விண்
- தேவருலகில். இசை உலாவு - புகழ்பெறச் சுற்றிலும் கமழும்
திருவேதிகுடியே.