3645. கந்தமலி தண்பொழினன் மாடமிடை
 

     காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு
     வேதிகுடி யாதி கழலே
 சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க
     ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது
     வேசரத மாணைநமதே.                11

     11. பொ-ரை: நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும்,
அழகிய மாடங்களும் நெருங்கிய சீகாழியில் அவதரித்த ஞான
சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை
கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான
சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள்
நல்லவர்களாய்த் திகழ்வர். மறுமையில் தேவலோகத்தை அடைந்து
அரசாள்வர். இது நமது ஆணை.

     கு-ரை: கந்தம் மலி - வாசனைமிகுந்த. தண்பொழில் -
குளிர்ச்சி பொருந்திய சோலைகளும். நல் மாடம் - அழகிய
மாடங்களும். மிடை - நெருங்கிய (காழி,) மலி - பொருட்
செறிவையுடைய (செந்தமிழ்.) ஆதி - முதல்வன். சரதம் - நிச்சயம்.