3662. மண்ணின்மறை யோர்மருவு வைதிகமு
       மாதவமு மற்றுமுலகத்
தெண்ணில்பொரு ளாயவை படைத்தவிமை
     யோர்கள்பெரு மானதிடமாம்
நண்ணிவரு நாவலர்க ணாடொறும்
     வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர்
     நீள்புரிசை வீழிநகரே.                6

     6. பொ-ரை: இப்பூவுலகில் அந்தணர் ஆற்றி வருகின்ற
வைதிக தருமங்களையும், மகா முனிவர் ஒழுகிவருகின்ற
தவநெறிகளையும், மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை
அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, நாடிவருகின்ற புலவர்கள் நாள்தோறும்வளர்க்க வளர்ந்து
வரும் புகழையுடையதும், வானளாவிய மாளிகையின் நிறைந்து
செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமான திருவீழிமிழலை
ஆகும்.

      கு - ரை: வைதிகமும் - வேதநெறி யொழுக்கத்திற்குரிய
அறங்களையும். மாதவம் - சிறந்த தவநெறி யொழுக்கத்திற்குரிய
அறங்களையும், மற்றும் உலகியல் நெறிபற்றி யொழுகற்பால
பல்வகையறங்களையும் படைத்தருளிய சிவபெருமானது இடமாவது
என்பது முதலிரண்டடியின் கருத்து. நாடி வருகின்ற புலவர்கள்
நாள்தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும், வான்
அளாவிய மாளிகைகள் செறிந்து செல்வம் வளர்வதும், ஓங்கிய
மதிலையுடையதுமாகிய திருவீழிமிழலையென்பது பின்னிரண்டடியின்
கருத்து.