3665. ஏனவுரு வாகிமணி டந்தவிமை
       யோனுமெழி லன்னவுருவம்
ஆனவனு மாதியினோ டந்தமறி
     யாதவழன் மேனியவனூர்
வானணவு மாமதிண் மருங்கலர்
     நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
வேனலமர் வெய்திட விளங்கொளியின்
     மிக்கபுகழ் வீழிநகரே.                 9

     9. பொ-ரை: பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய
திருமாலும், அழகிய அன்னப்பறவை உருவெடுத்த பிரமனும் தேடத்
தன் முடியையும், அடியையும் அறியப்படாத வண்ணம் நெருப்பு
வடிவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது,
வானளாவிய பெரிய மதில்களினருகில் மலர்கள் அடர்ந்த, வளமிக்க
சோலையில் மாந்தர் வெயிற்காலத்தில் தங்க, விளங்குகின்ற
தெய்வத்தன்மை மிக்க புகழுடைய திருவீழிமிழலையாகும்.

     கு-ரை: ஏன உருவு ஆகி - பன்றி வடிவம்கொண்டு. மண்
இடந்த - பூமியைத்தோண்டிய. இமையோனும் - தேவனாகிய
திருமாலும். எழில் - அழகிய, அன்ன உருவம் ஆனவனும்.
ஆதியினோடு - அடியையும். அந்தம் - முடியையும். அறியாத -
(முறையே) அறியப்படாத. அழல் மேனியவன் - நெருப்பு வடிவாய்
நின்ற சிவபெருமானது ஊர். வான் அணவு - ஆகாயத்தை அளாவிய.
மா மதில் மருங்கு - பெரிய மதிலினருகிலே. அலர் நெருங்கிய -
மலர்கள் அடர்ந்த. வளம்கொள் பொழில்வாய் - சோலையில்.
வேனல் அமர்வு எய்திட - மாந்தர் வெயிற் காலத்திற்குத் தங்க.
விளைங்குகின்ற. ஒளியின் மிக்க - தெய்வத்தன்மையால் மிக்க. புகழ்
- புகழையுடைய. வீழிநகர் - திருவீழிமிழலையாம்.