3673. பற்றலர்த முப்புரமெ ரித்தடிப
       ணிந்தவர்கண் மேலைக்
குற்றமதொ ழித்தருளு கொள்கையினன்
     வெள்ளின்முது கானிற்
பற்றவனி சைக்கிளவி பாரிடம
     தேத்தநட மாடுந்
துற்றசடை யத்தனுறை கின்றபதி
     தோணிபுர மாமே.                   6

     6. பொ-ரை: சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை
எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர். தம் திருவடிகளைப் பணிந்து
வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும்
கொள்கையினையுடையவர். பாடைகள் மலிந்த சுடுகாட்டில்
பற்றுடையவர். பூதகணங்கள் இசைப் பாடல்களைத் துதித்துப்பாட
நடனமாடுபவர். அடர்ந்து வளர்ந்த சடையையுடைய,
அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து
அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: பற்றலர் - பகைவர் (மனம் பற்றுதல் இல்லாதவர் காரணப்பெயர்.) மேலைக்குற்றம் - முற்பிறவிகளிற்செய்து நுகர்ந்து
எஞ்சிய வினைகள். அடிபணிந்த அன்பர்கள் தன்னை
யோவாதேயுள்குவாராயின், அவை காட்டுத்தீமுன் பஞ்சுத்துய்போற்
கெடுதலின் ஒழித்தருளு கொள்கையினன் என்றார். அருளு என்பதில்
உகரம் சாரியை. வெள்ளில் - பாடை. முதுகானில் - மயானத்தில்.
பற்றவன் - விருப்புடையவன். இசைக்கிளவி - இசைப்பாடல்களை
(கிளவி - வெளிக்கிளம்பும் ஓசை) பாரிடம் (அது) - பூதம். ஏத்த -
துதித்துப்பாட. நடமாடும் - அத்தன். துற்ற - நெருங்கிய சடை,
(அத்தன்) உறைகின்றபதி தோணிபுரம் ஆம்.