3677. மூடுதுவ ராடையினர் வேடநிலை     
 

     காட்டுமம ணாதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ
     டுத்தடைவி னானக்
காடுபதி யாகநட மாடிமட
     மாதொடிரு காதிற்
றோடுகுழை பெய்தவர்த மக்குறைவு
     தோணிபுர மாமே.                   10

     10. பொ-ரை: உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த
புத்தர்களும், தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப்
போல தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய
சமணர்களும் தீமை விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர்.
அத்தீய மொழிகளை நீக்கி, சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக்
கொண்டு, நடனமாடி, உமாதேவியோடு கூடி, இருகாதுகளிலும்
முறையே தோடும், குழையும் அணிந்தவராகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: மூடு துவராடையர் - துவர் ஆடை போர்ப்
பவர்களாகிய புத்தர். வேட நிலைகாட்டும் அமண் ஆதர் - தமது
வேடமாகிய ஆடையணியாத் தன்மையைப்போலவே தமது
ஞானநிலையும் எனக்காட்டும் சமணர்களாகிய அறிவிலிகள்.
அம்மொழி - அவர் மொழியை. கெடுத்து - நீக்கி. அக்காடு -
அத்தகைய மயானம். பதியாக - இருப்பிடமாகக்கொண்டு, நடம்
ஆடி. மடமாதோடு (கூடி) - அர்த்தநாரீசுர வடிவமாய். ருகாதில்
-இருகாதுகளிலும். முறையே, தோடும், குழையும் பெய்தவர் -
அணிந்தவராகிய சிவபெருமானுக்கு. உறைவு - வசிக்கும் இடம்,
தோணிபுரமாம். அடைவினால்- முறைப்படி. அதைச் சேர்வீர்களாக
என்பது அவாய் நிலை. ஆடையர் ஆதர் கேடுபல சொல்லிடுவர்
அம்மொழி கெடுத்து அடைவினால் அதனைச் சேர்வீர்களாக என்க.
அல்லது கெடுத்த அடைவினான் எனப்பிரித்து அடைவினான் -
சிவபெருமான் எனலும் ஆம்.