3692. நீடுவரை மேருவில தாகநிகழ்
       நாகமழ லம்பால்
கூடலர்கண் மூவெயிலெ ரித்தகுழ
     கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுன னின்றுதிக
     ழுந்நிமல னிடமாம்
சேடுலவு தாமரைக ணீடுவய
     லார்திருந லூரே.                     3

     3. பொ-ரை: பெரிய மேருமலையை வில்லாகவும், வாசுகி
என்னும் பாம்பை நாணாகவும், அக்கினியை அம்பாகவும் கொண்டு,
பகைவர்களின் மும்மதில்களை எரித்த அழகனான சிவபெருமானின்
சடைமேல் இதழ்களையுடைய கொன்றையும், கங்கையும்
விளங்குகின்றன. இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான
அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பெருமைமிக்க
தாமரை மலர்கள் விளங்கும் வயல்வளமுடைய திருநல்லூர் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: நீடுவரைமேரு - நெடிய மலையாகியமேரு, (வில்அது
ஆக) நிகழ் - பொருந்திய (நாகம்). நாண் ஆக - (என்பது
இசையெச்சம்). அழல் அம்பால் - (திரிபுரம் எரித்த அம்பின் நுனி
நெருப்பு ஆயினபடியால் அழல் அம்பு எனப்பட்டது.) கூடலர் -
பகைவர் (காரணப்பெயர்) ஏடுஉலவு - இதழ்களையுடைய. சேடு உலவு
தாமரை - உயர்வு்பொருந்திய தாமரை. "பூவினுக்கு அருங்கலம்
பொங்கு தாமரை" என்றபடி.