3698. மாலுமலர் மேலயனு நேடியறி
       யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக
     ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி
     மூன்றுதழ லோம்பும்
சீலமுடை யார்கணெடு மாடம்வள
     ருந்திருந லூரே.                     9

     9. பொ-ரை: திருமாலும், தாமரை மலர்மேல் வீற்றிருக்கின்ற
பிரமனும் தேடியும் அறியமுடியா வண்ணம் பெருஞ்சோதிவடிவாய்
விளங்கியவனும், இயல்பாகவே பாசங்களின் நீங்கி முற்றுணர்வும்,
இயற்கையுணர்வும் உடையவனும், குற்றமற்ற புகழையுடையவனும்
ஆன சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நான்கு
வேதங்களும், ஆறு அங்கங்களும், மூன்று அழலும் ஓம்புகின்ற
சீலமுடைய தூய அந்தணர்கள் வாழ்கின்ற நீண்ட
மாடமாளிகைகளையுடைய திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: மாலும் - திருமாலும், மலர்மேல் (வாழும்) அயனும்.
நேடி - தேடி. அறியாமை - அறியாவாறு (எரி ஆய கோலம்
உடையான்) கோதில் உணர்வு - இயல்பாகவே பாசங்களினீங்கிய,
முற்றும் உணர்தலாகிய வியாபக அறிவும். கோது இல் - குற்றமற்ற.
புகழான் - புகழுமுடையவன்.