3700. திரைகளிரு கரையும்வரு பொன்னிநில
       வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியைந லந்திகழ்செய்
     தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம்பந்தனிசை
     மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி
     பேறுபெறு வாரே.                    11

     11. பொ-ரை: காவிரியின் இருகரைகளிலும் அலைகள்
மோதுவதால் செழிப்புடன் விளங்கும் திருநல்லூர் என்னும்
திருத்தலத்திலுள்ள மழுவேந்திய கரமுடைய சிவபெருமானை, வயல்
வளமிக்க, தோணிபுர நாதனான தமிழ் ஞானசம்பந்தன் போற்றிசைத்த
இப்பாமாலையை ஓதுபவர்கள், பிரமனால் நறுமணமிக்க சிறந்த
மலர்கள்தூவி வழிபடப்படும் சிவபெருமானுடைய திருவடியைப் பெறும் பேற்றினை அடைவார்கள்.

     கு-ரை: திரைகள் - அலைகள், இருகரையும் வரு, பொன்னி -
காவிரி, நிலவும் - செழிப்பிக்கும், திருநல்லூர், என்றது, மேல்(முதற்
பாடலில்) வரைமேலருவி..... கமழும் என்றதனாற் குறிஞ்சி நிலமாகக்
கருதற்க, மருத நிலமே என்பதற்கு. பரசுதருபாணியை - மழுவேந்திய
கரதலம் உடைய சிவபெருமானை, நலம் நிகழ் - வளத்தால் விளங்குகின்ற. செய் - வயலை உடைய, தோணிபுரம், நாதன் -
தலைவராகிய, மொழிவார் - பாடுவோர், விதி - பிரமனும், விரை -
வாசனை.