3717. |
பொன்னன
புரிதரு சடையினர் பொடியணி |
|
வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய
வொருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு
மார்பினில்
மின்னென மிளிர்வதொ ரரவினர் பதிவிழி
மிழலையே. 6 |
6.
பொ-ரை: இறைவன் பொன்போன்று ஒளிரும் முறுக்கேறிய
சடைமுடி உடையவர். திருவெண்ணீறு அணிந்த திருமேனியர்.
தம்மை நினைந்து போற்றும் அடியவர்களின் வினைகளை வேரோடு
களைந்து அருள்புரியும் ஒப்பற்றவர். இனிய இசையுடன் போற்றப்
படும் புகழையுடையவர். அழகிய திருமார்பில் மின்னலைப் போல்
ஒளிரும் பாம்பணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதி,
திருவீழி மிழலை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
பொன் அ(ன்)ன - பொன்போன்ற. புரிதரும் - முறுக்கு
ஏறிய (சடையினர்). உன்னினர் - தன்னை நினைப்பவர்களுடைய.
வினை அவை - மலங்களை, களைதலை - நீக்குவதை - மருவிய
(தொழிலாகப்) பொருந்திய, ஒருவனார். களைதல் - வேரோடு
பிடுங்குதல், வினை - கன்மமலம், அவையென்றதனால் ஏனை மாயை
ஆணவ மலமும் கொள்ளப்படும். ஒருவனார் - வேதங்களில் ஒன்று
என்று எடுத்து ஓதப்பட்டவர்: "ஒருவனென்னும் ஒருவன் காண்க."
(தி.8 திருவண்டப்பகுதி. அடி -43) "ஒன்றென்றது ஒன்றே காண்
ஒன்றே பதி" என்பது சிவஞானபோத வெண்பா. தென் என இசை
முரல் சரிதையர் - தென் என்னும் இசைக்குறிப்போடு சங்கீதங்களைப்
பாடும் இயல்பினர். மிளிர்வது - பிரகாசிப்பதாகிய, ஓர் அரவினர்.
|