3728. |
மத்தர
முறுதிறன் மறவர்தம் வடிவுகொ |
|
டுருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை யசைவுசெய்
பரிசினால்
அத்திர மருளுந மடிகள தணிகிளர்
மணியணி
சித்திர வளநகர் செறிபொழி றழுவிய
சேறையே. 6 |
6.
பொ-ரை: மந்தர மலை போன்ற வலிமையுடைய வேட்டுவ
வடிவம் தாங்கி வந்து, பத்துப் பெயர்களைச் சிறப்பாகக் கொண்ட
விசயனைப் பொருது தளரச் செய்து, அவன் கௌரவர்களைத்
தோல்வியடையச் செய்யும் வண்ணம் பாசுபதம் என்னும் அம்பைக்
கொடுத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளுவது இரத்தினங்களால்
அலங்கரிக்கப்பட்ட அழகிய வளநகராய், அடர்ந்த சோலைகள்
சூழப்பெற்ற திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
மத்தரம் உறுதிறல் - மந்தர மலைபோன்ற
வலிமையையுடைய. மறவர் - வேடர். (மந்தரம் - மத்தரம் என
வலித்தல் விகாரம்பெற்றது. உறு - உவமவாசகம்) உரு உடை -
அழகையுடைய. பத்து ஒரு பெயருடை - ஒருபத்துப் பெயரையுடைய.
விசயனை - அருச்சுனனை. அசைவு செய் பரிசினால் - தோற்பிக்கும்
தன்மையினால். அத்திரம் - பாசுபதம் என்னும் அம்பை. அருளும் -
கொடுத்தருளிய. நம் அடிகள் - நமது பெருமான். மணி அணி -
இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட. சித்திரம் - அழகிய (வளநகர்),
செறி பொழில் தழுவிய - அடர்ந்த சோலைகளாற் சூழப்பட்ட சேறை.
அணிகிளர் - அழகு மிகுந்த. (அத்திரம் அருளும் நம் அடிகளது)
வளநகர் திருச்சேறையென்க.
|