3743. அத்திர நயனிதொன் மலைமகள்
       பயனுறு மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை
     யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள்
     ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை
     பழுதிலை மெய்ம்மையே.              10

     10. பொ-ரை: அம்பு போன்று கூர்மையான கண்களையுடைய
தொன்மையான மலைமகளான உமாதேவியின் பயன்தரும் அதிசயம்
விளைவிக்கும், பலவகையான இரத்தினங்கள் பதிக்கப்பட்ட
ஆபரணங்கள் அணியப் பெற்றுள்ள இருமுலைகளோடு
நெருங்கியிருப்பவரும், புத்தர்களாலும், சமணர்களாலும்
உணரப்படாதவரும் பொய்யினின்று நீங்கியவருமான திருநள்ளாற்று
இறைவரின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட
ஏடுகளை, திரண்டு எரியும் இந்நெருப்பில் இட்டாலும் அவை
பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.

     கு-ரை: அத்திரம் நயனி - அம்பு போன்ற கண்களை
உடையவள். அதிசயம் - அதிசயம் விளைக்கும். சித்திரம் - பல
வகையான. பொய் பெயரும் - பொய்யினின்றும் நீங்கிய நள்ளாறர்.