3765. கடுமலி யுடலுடை யமணருங்
       கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற வுரைதனை யிகழ்பவர்
     கருதுநம் மீசர்வானோர்
நடுவுறை நம்பனை நான்மறை
     யவர்பணிந் தேத்தஞாலம்
உடையவன் கொச்சையே யுள்கிவாழ்
     நெஞ்சமே யஞ்சனீயே.               10

    10. பொ-ரை: நெஞ்சமே! கடுக்காய்களைத் தின்னும்
சமணர்களும், கஞ்சி உணவை உண்கின்ற புத்தர்களும், சொல்லுகின்ற
சமயபோதனைகளை இகழ்பவர்களாகிய அடியவர்கள் நினைந்து
போற்றும் நம் இறைவனும், தேவர்கள் தன்னைச் சுற்றி நின்று தொழ
அவர்கள் நடுவுள் வீற்றிருந்தருளும் நண்பனும், நான்கு
வேதங்களையும் நன்கு கற்ற அந்தணர்கள் பணிந்து போற்ற இந்த
உலகம் முழுவதையும் தனக்கு உடைமைப் பொருளாக உடையவனுமாகிய சிவபெருமானது திருக்கொச்சைவயம் என்னும்
திருத்தலத்தைத் தியானித்து நல்வாழ்வு வாழ்வாயாக! நீ அஞ்ச
வேண்டா.

     கு-ரை: கடு மலி உடல் - வெறுக்கத்தக்க துர்நாற்றம் மிக்க
உடலையுடைய. சமணரும் சாக்கியரும் (புத்தரும்). இடும் - சொல்லும்.
அறவுரைதனை - சமயபோதனைகளை. இகழ்பவர்களாகிய
அடியார்கள். கருதும் - நினைந்து ஏத்தும் (நம் ஈசர்). வானோர் நடு
உறைநம்பனை - தேவர்கள் தன்னைச் சுற்றித் தொழ அவர் நடுவுள்
நாயகராக வீற்றிருந்தருளும் சிவன்.