3771. வளங்கிளர் மதியமும் பொன்மலர்க்
       கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங்
     கண்ணுதற் கபாலியார்தாம்
துளங்குநூன் மார்பின ரரிவையொ
     டொருபக லமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியா ரிரவிடத்
     துறைவர்வேள் விக்குடியே.            5

     5. பொ-ரை: அழகு மிளிரும் சந்திரனும், பொன் போன்ற
கொன்றைமலரும், வாள் போன்று ஒளிரும் பாம்பும் இருக்குமிடமாகச்
சடைமுடியில் வைத்தருளிய, நெற்றிக்கண்ணையுடைய எங்கள்
சிவபெருமான் பிரமகபாலம் ஏந்தியவர். அசைகின்ற முப்புரி
நூலணிந்த மார்பினர். அவர் உமாதேவியாரோடு பகலில் நீர்வளமிக்க
திருத்துருத்தி என்னும் திருத்தலத்திலும், இரவில் திருவேள்விக்குடி
என்னும் திருத்தலத்திலும் வீற்றிருந்தருளுவார்.

     கு-ரை: மதியமும், கொன்றையும், பாம்பும் தமக்கு இடமாகக்
கொள்ளச்சடையில் வைத்த கபாலியார், துளங்கும் நூல் - அசையும்
பூணூல்.