3781. கறியுமா மிளகொடு கதலியின்
       பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி
     தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார்
     நீடுவா னுலகினூடே.                  4

     4.பொ-ரை: உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும்
கலந்து தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும்
குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய
கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம்
உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து மேன்மையுடன்
மகிழ்ந்திருப்பர்.

     கு-ரை: கறியும் - உறைக்கும். மாமிளகு ஒடு - மிக்க மிளகுச்
செடிகளோடு. கறி - கறிப்பு எனவும் வழங்கும். அவரது
மலரடிகளைத் தொழுது எழு எண்ணும் உள்ளக்
குறிக்கோளையுடையவர் என்பது, மலரடி... ... குறியினார் என்பதன்
பொருள். மிகக் கூடுவார் - என்றும் கூடிவாழ்வார்.