3786. கட்டமண் டேரருங் கடுக்கடின்
 

     கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் மறவுரை கொள்ளலும்
     பெருவரைப் பண்டமுந்தி
  
எட்டுமா காவிரி வடகரை
     யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி
     பெறுவது திண்ணமாமே.               10
  

     10. பொ-ரை: கடுக்காய்களைத் தின்கின்ற கழுக்களான
கட்டுப்பாட்டையுடைய சமணர்களும், புத்தர்களும், மன
இரக்கமின்றிக் கூறும் அறவுரைகளை கொள்ளாதீர். பெரிய
மலையிலுள்ள பொருள்களைத் தள்ளிப் பாயும் காவிரியின்
வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும்
திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் சீலமிக்க சிவபெருமானின் திருவடிகளைத்
தொழுபவர்கள் சிவகதி பெறுவது உறுதியாகும்.

     கு-ரை: கட்டு - கட்டுப்பாட்டையுடைய. மண் (உம்) தேரரும்
- அமணரும், புத்தரும். அமண்:- தூது, அரசு என்பன போல விகுதி
தொக்குநின்றது. கடுக்கள் தின் - கடுக்காய்களைத் தின்கின்ற.
கழுக்கள் - கழுந்து போல்பவர். கசிவு - மன விரக்கம். பிட்டர் -
விலக்கத்தக்கவரும். மயிர்பறித்த தலையினராதலின் அமணரைக்
கழுக்கள் என்றார். பிட்டர் - பிரஷ்டர் என்ற வடசொல்லின் திரிபு.
அறவுரை - தர்மோபதேசங்கள். கொள்ளலும் - கொள்ளன்மின்
(கொள்ளும் உடம்பாடு) எதிர்மறைப் பன்மை ஏவல் வினைமுற்று.
கொள்+அல்+உம்; அல் - எதிர்மறை இடைநிலை. உம் - ஏவற்
பன்மை விகுதி. வரைப் பண்டம் - மலையில் உள்ள பொருள்கள்.
அவை:- முதல் ஐந்து பாடல்களிலும் கூறியவை. உந்தி எட்டும் -
தள்ளிப் பாயும். மா காவிரி “இடையுரி வடசொலின்” (நன்னூல் சூத்.
239) என்னும் விதிப்படி இயல்பாயிற்று. சிட்டன் - சீலத்தை
விரும்புவோன், சிவபிரான். “சிட்டனைச் சிவனைச் செழுஞ்சோதியை”.
(தி.5.பா.81.பா.1)