3793. வெடிதரு தலையினர் வேனல்வெள்
       ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியத
     ளாடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர்
     மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி
     யுறை செல்வர் தாமே.                 6

     6. பொ-ரை: புதர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய
திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான், மண்டையோட்டை மாலையாக உடையவர். சினமிகு வெண்ணிற
இடபத்தை வாகனமாக உடையவர். விரிந்த சடையுடையவர்.
திருவெண்ணீறு அணிந்த மார்பினர். புலித்தோலாடை அணிந்தவர்.
கோபம் பொங்கும் பாம்பை அணிந்தவர், அழகிய உமாதேவியைத்
தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். தாருகாவனத்து
முனிவர்களின் பத்தினிகளை மயங்கும்படி செய்தவர். அவரை
வழிபடுவீர்களாக.

     கு-ரை: வெடிதரு - வெடித்த. தலை - மண்டையோடு. (பிரம
கபாலத்தை) தீயில் வெடித்த தலைபோன்றது என்க. வேனல் -
வெப்பம். இங்குச் சினத்தைக் குறித்தது. வெள் ஏற்றினர் -
வெண்மையையுடைய ஏற்றினர். வெடிதருதலை என்பதை, “குணந்தான் வெளிப்பட்ட ... கொடியிடை” என்னும் திருக்கோவையார் போலக்
கொள்க. செடி - புதர்கள்.