3815. வெந்தவெண் பொடியணி வெங்குரு மேவிய
  அந்தமில் பெருமையி னீரே
அந்தமில் பெருமையி னீருமை யலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.        6

     6. பொ-ரை: சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை
அணிந்து, திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே!
அழிதல் இல்லாத புகழுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத்
தியானிப்பவர்களின் வினைகள் சிதைந்து போகும்.

     கு-ரை: வெந்த - சுடப்பட்ட, வெண்பொடி - வெண்மையான
திருநீறு, அந்தம் - முடிவு, அழிவு. நீறு அணி அந்தம் இல்
பெருமையினீர் - திரு நீற்றையணிந்து, அதனால்தாம்
அழிவில்லாதவன் எனக்காட்டும் பெருமையையுடையீர், “சிவனவன்
திரடோண்மேல், நீறு நின்றது கண்டனை” என்னும் திருவாசகமும்
இக்கருத்தாதல் காண்க.