3837. நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
  கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்அடிக் கீழே.                7

     7. பொ-ரை: நிறையுடையவர்கள் தொழுது எழுகின்ற
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய
சிவபெருமானே! அவ்வாறு விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய
உம்மைத் தரிசிப்பவர்கள் உம் திருவடிக்கீழ் என்றும் வீற்றிருப்பர்.

     கு-ரை: நிறையவர் - “காப்பன காத்துக் கடிவன கடிந்து
ஒழுகும் ஒழுக்கம்” உடையவர். (களவியலுரை) “உம்மைக் காண்பவர்
...... கீழே” என்றது, “அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே,
அறிவுதனை யருளினால் அறியாதே அறிந்து ...... குழைந்திருப்பையாயின் ..... ஆயே” (சிவஞானசித்தி சுபக்கம். சூத்.
8.30) என்ற சாத்திரக் கருத்து.