3856. விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
  இட்டெழில் பெறுகிற தெரியே
இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
அட்டது வரைசிலை யாலே.                 4

     4. பொ-ரை: மிகுந்த அழகும், புகழுமுடைய திருவீழிமிழலை
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் கையில்
ஏந்தப்பட்டதால் அழகுபெற்ற நெருப்பை உடையவருமான
சிவபெருமானே! அழகிய நெருப்பேந்திய நீர் திரிபுரத்தை எரித்தது
மேருமலையை வில்லாக வளைத்தும் (அக்கினியைக் கணையாக
எய்தும்) அல்லவா_

     கு-ரை: விட்டு எழில் - அழகு தங்கி, அதனாற் புகழ்
பெறுகின்ற மிழலை. விட்டு - இப்பொருட்டாதலைப் புறப்பொருள்
வெண் பாமாலை வஞ்சிப்படலம் 18 ஆம் பாட்டு உரையான் அறிக.
கையில் இட்டு - இடப்பெற்று. அதனால் அழகுடையதாகியதும்
நெருப்பே. அழகனைச் சேர்ந்தமையால் அழகில் பொருளும்
அழகியதாயிற்று. அது “நாறுபூம் பொழில் நாரையூர் நம்பனுக்
காறுசூடினும் அம்ம அழகியே” என்பதாலும் உணர்க. கையது கனல்,
எரித்ததும் கனல் ஆயின், வரைசிலை எற்றுக்கு? உமது தன்மை
அறிவாரார் என்ற குறிப்பு.