3870. மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
  கட்டமண் டேரைக்காய்ந் தீரே
கட்டமண் டேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே.                  10

     10. பொ-ரை: மொட்டுக்கள் மலர்கின்ற சோலைகளையுடைய
அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
கட்டுப்பாட்டினையுடைய சமணர்களையும், புத்தர்களையும்
கோபித்தவரான சிவபெருமானே! சமணர்களையும், புத்தர்களையும்
கோபித்த உம்மைத் தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள்
பெறுதற்குரிய முத்திப்பேற்றினைப் பெறுவர்.

     கு-ரை: கட்டு அமண் - கட்டுப்பாட்டையுடைய அமணரோடு.
தேர் - தேரரை. கடைக்குறை. காய்ந்தீர் - கோபித்தருளிளீர்.
உம்மைக் கருதுவோரே அன்பர்கள் பெறும் சிறப்பைப்
பெறுதற்குரியராவர். “செம்பொற் பாத மலர்காணாப் பொய்யர்
பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன்” என்பதன் எதிர்மறை.