| 
         
          | 3885. | நீரினார் 
            புன்சடை பின்புதாழ |   
          |  | நெடுவெண் 
            மதிசூடி ஊரினார் துஞ்சிருள் பாடியாடும்
 உவகை தெரிந்துணர்வார்
 ஏரினார் பைம்பொழில் வண்டுபாடு
 மிராமேச் சுரமேய
 காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங்
 கடவுள் செயுஞ்செயலே.                7
 |  
             7.பொ-ரை:வண்டுகள் 
        பாடும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளுகின்ற, கார்காலத்தில் மலரும் கொன்றையையும்,
 வெண்ணிறப் பிறைச் சந்திரனையும் சூடியவரான சிவபெருமான்,
 கங்கையைத் தாங்கிய புன்சடை பின்புறம் தொங்க, மிக்க
 வெண்ணிறப்பிறைச்சந்திரனைச் சூடி, உலகமே உறங்கும் நள்ளிரவில்
 பாடி ஆடும் உவகையின் செயல் தன்மையை உணர்பவர்
 சிவஞானிகளாவர்.
 
       கு-ரை:நீரின் 
        - கங்கை நீரினால். ஆர் - நிறைந்த. நெடுவெண் - மிக்க வெண்மையையுடைய. தூங்கும் இரவில் ஆடும். உவகை -
 மகிழ்ச்சியை ஆராய்ந்து அறிபவர். காரின் ஆர் - கார்காலத்தில்
 மலர்தலையுடைய. கொன்றை, முதல் அடியில் நெடுவெண்மதி சூடி
 என்று வந்தமையால், ஈற்றடியில் வரும் வெண்டிங்கள்சூடும் கடவுள்
 என்பது சிவபெருமான் என வாளா பெயரளவாய் நின்றது, "மடியிலா
 மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு"
 (குறள்.610) என்றதில் வரும் அடி அளந்தான் என்பது போல. இருள் - இலக்கணையாய் 
        இரவையுணர்த்திற்று.
 |