3890. |
காம்பினை
வென்றமென் றோளி பாகங் |
|
கலந்தா
னலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடு விற்றிரு
நாரை யூர்மேய
பூம்புனல் சேர்புரி புன்ச டையான்
புலியின் னுரிதோன்மேல்
பாம்பினை வீக்கிய பண்ட ரங்கன்
பாதம் பணிவோமே. 1 |
1.பொ-ரை:சிவபெருமான்,
மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். நலம்
தரும் இனிய
நீர் சூழ்ந்த சிறந்த நீர்நிலைகளையுடைய திருநாரையூர் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். அழகிய கங்கையையும்,
முறுக்குண்ட சிவந்த சடையையுமுடையவர். புலித்தோலாடை
அணிந்தவர். பாம்பைக் கச்சாகக் கட்டியவர். பண்டரங்கன் என்னும்
திருப் பெயர் உடையவர். அத்தகைய சிவபெருமானின்
திருப்பாதங்களை நாம் பணிவோமாக.
கு-ரை:காம்பினை
வென்ற மென்தோளி - மூங்கிலை வென்ற
மெல்லிய தோளையுடைய உமாதேவியார். மென்மைத் தன்மையால்
வென்றதென்பதற்கு மென்தோளி என்றார்; தேம் புனல் - இனிய நீர்
சூழ்ந்த சிறந்த பெரிய மடுக்களையுடைய திருநாரையூர். பூம் புனல் -
மெல்லிய கங்கை நீர் தங்கிய. புரி - முறுக்கிய. புன் சடையான் - சிறுசடைகளையுடையவன்.
உரி தோல் - உரித்த தோலாகிய
உடையின், பாம்பைக் கச்சையாகக் கட்டிய. பண்டரங்கன் ஆடிய
கூத்து பாண்டரங்கம் எனப்படும். "திருத் தோணிபுரத்துறையும்
பண்டரங்கர்" என முன்னும் வந்தமை (தி.1.ப.60.பா.1.) காண்க.
பண்டரங்கன் சிவபெருமானுக்கு ஒரு பெயர்.
|