3891. |
தீவினை
யாயின தீர்க்க நின்றான் |
|
றிருநாரை
யூர்மேயான்
பூவினை மேவு சடைமுடி யான்புடை
சூழப் பலபூதம்
ஆவினி லைந்துங்கொண் டாட்டு கந்தா
னடங்கார் மதின்மூன்றும்
ஏவினை யெய் தழித்தான் கழலே
பரவா வெழுவோமே. 2
|
2.
பொ-ரை: சிவபெருமான் தம்மை வழிபடுபவர்களின்
தீவினைகளைத் தீர்த்தருள்பவர். திருநாரையூர் என்னும் திருத்
தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். பூமாலையணிந்த சடைமுடி
உடையவர். பூதகணங்கள் புடைசூழ விளங்குபவர். பசுவிலிருந்து
பெறப்படும் ஐந்து பொருள்களால் (பஞ்சகவ்வியம்) அபிடேகம் செய்து கொள்வதில் விருப்பமுடையவர்.
அடங்காது திரிந்த பகையசுரர்களின்
மும்மதில்களை ஓர் அம்பு எய்து அழித்தவர். அப்பெருமானின்
திருவடிகளை நாம் வழிபட்டு உயர்வடைவோமாக!.
கு-ரை:
(தீவினை) ஆயின:- முதல் வேற்றுமையின் சொல்லுருபு, தீர்க்க - பற்றற ஒழிக்க. "தீர்தலும்
தீர்த்தலும் விடற் பொருட்டாகும்".
(தொல் சொல் சேனாவரைய உரியியல் சூத். 22.) பல் பூதம் புடை
சூழ என மாற்றுக. ஆட்டு உகந்தான் - அபிடேகங் கொள்ளுதலை
விரும்பியவன். ஆடு - ஆடுதல்: நீராடுதல்; முதனிலை
திரிந்ததொழிற்பெயர். ஏவினை - அம்பை. எய்து - செலுத்தி.
அழித்தான்.அம்பை எய்யவில்லை ஆயினும், அம்பின் கூறாகிய
நெற்றி விழியின் தீயால் எரித்ததால் அவ்வாறு உபசரித்தார். பரவா -
பரவி. துதித்து. எழுவோம் - அடிமைத் திறத்தில் ஓங்குவோமாக.
|