3897. நாமமெ னைப்பல வும்முடை யான்நல
       னோங்கு நாரையூர்
தாமொம் மெனப்ப றையாழ் குழல்
     தாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சு டலை
     யியம்பும் மிடுகாட்டில்
சாம முரைக்கநின் றாடு வானுந்
     தழலாய சங்கரனே.                   8

     8. பொ-ரை: நலன்களைப் பெருகச் செய்யும் திருநாரையூர்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான்
பல திருப்பெயர்களை உடையவர். பறை, யாழ், குழல் முதலியன தாம்
ஒம் என ஒலிக்க, அவற்றொடு ஒத்துத் தம் திருவடிகளில்
அணிந்துள்ள கழல்கள் ஒலிக்க, காட்டில், கொள்ளி விளக்கு எரிய,
சாமகானம் ஒலிக்க நின்றாடுகின்ற பெருமான் நெருப்புருவான
சங்கரனே ஆவார்.

     கு-ரை: நாமம் எனை பலவும்:- "ஒரு நாமம் ஓருருவம்
ஒன்றிமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம்
கொட்டாமோ" (தி.8 தெள்ளேணம்.1.) என்ற பொருளது. தாம் ஒம்
எனப்பறை அறையும் - இம் முழவோசைகள், யாழ் குழல் தாள் ஆர்
கழல் பயில - யாழும், குழலும், கழலும் ஆகிய இவற்றோசையோடு
ஒத்து ஒலிப்ப. ஈம விளக்கு - கொள்ளி. எரிதல் - நாடக
அரங்கிற்கேற்றிய விளக்காக எரிதல். சுடலை இயம்பும் - சுடலையில்
உண்டாகும் ஓசை, ஒலிக்கும். மயானத்தில் சாமம் உரைக்க -
அச்சுடலையோசையே சாமவேதம் ஒலிப்பதாகக் கொண்டு
ஆடுவானும். தழல் ஆய - அக்கினியே சொரூபமான சங்கரனும்
ஆம்.