3898. |
ஊனுடைவெண்
டலைகொண் டுழல்வா |
|
னொளிர்புன்
சடைமேலோர்
வானிடைவெண் மதிவைத் துகந்தான்
வரிவண் டியாழ்முரலத்
தேனுடைமா
மலரன்னம் வைகுந்
திருநாரை யூர்மேய
ஆனிடையைந் துகந்தா னடியே
பரவா வடைவோமே. 9
|
9.
பொ-ரை: சிவபெருமான் ஊனுடை மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு, பிச்சையேற்றுத்
திரிபவர். ஒளிர்கின்ற சடைமேல், வானத்தில் தவழும் வெண்ணிறச் சந்திரனை அணிந்து,
மகிழ்பவர். வரிகளையுடைய வண்டுகள் யாழிசைபோல் ஒலிக்க, தேன்
உடைய சிறந்த தாமரை
மலரில் அன்னம் தங்க விளங்கும்
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர்.
பசுவில் இருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம்
செய்யப்படுதலை விரும்புபவர். அப்பெருமானின் திருவடிகளை
வணங்கி நற்கதி அடைவோமாக!
கு-ரை:
ஊன்உடை - ஊனையுடைய வெண்தலை. கொண்டு -
பாத்திரமாகக் கொண்டு. உழல்வான் - பிச்சைக்குத் திரிபவன்.
சடைமேல். வான் இடை - ஆகாயத்தில் தவழும். (மதி) வைத்து -
அணிந்து ("மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்" என்ற
திருப்புகழிலும் இப்பொருள் ஆண்டமை அறிக.) உகந்தான் -
மகிழ்ந்தவன். மா - சிறந்த. மலர் - தாமரை மலரில். "பூவினுக்
கருங்கலம் பொங்கு தாமரை" ஆகையால் மாமலர் - தாமரை மலர்
என்க. வரிவண்டு யாழ் போல் ஒலிக்க அவ்வோசையைக் கேட்டுத்
தாமரை மலரில் அன்னம் வைகும் திருநாரையூர். அடியையே பரவி
அடைவோமாக.
|