3914. வாண்முக வார்குழல் வாணெடுங்கண்
       வளைத்தோண் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின்
     னுரிமே னிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த
     நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும்
     பரிதிந் நியமமே.                     3

     3. பொ-ரை: ஒளிபொருந்திய திருமுகத்தையும், நீண்ட
கூந்தலையும், வாள்போன்று ஒளியும் கூர்மையும் மிக்க நீண்ட
கண்களையும் மூங்கில் போன்ற மென்மை வாய்ந்த தோள்களையும் உடைய உமாதேவி அஞ்சும்படி, நீண்ட துதிக்கையையுடைய
யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் சிவ
பெருமான்.அவர் நான் நாணம் கொண்டு விளங்குமாறு செய்தவர்.
என் பெண்மை நலத்தை இழந்து அவரையே பற்றுமாறு செய்தவர்.
அத்தலைவர் வீற்றிருந்தருளும் இடம் வண்டுகள் முரன்று பாடியாடும்
திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: வாள் முகம் - ஒளி பொருந்திய முகத்தையும். வார்
குழல் - தொங்கும் கூந்தலையும். வாள் நெடும் கண் - வாள் போன்ற நெடிய கண்களையும். வளைத்தோள் - மூங்கில் போன்ற தோளையும்
உடைய. மாது - உமை அம்மையார், அஞ்ச. பைங் களிறு - கரிய
யானை (பச்சை, நீலம், கறுப்பு இந்நிறங்களுள் ஒன்றனை
மற்றொன்றாகக் கூறுதல் மரபு) மேல் நிகழ்வித்து - உடம்பின்மேற்
போர்த்து. நாண் - பிறர்முன் நான் நாணுதலை. முகம் - என்னிடத்து.
காட்டி - உண்டாகச்செய்து. நலம் - பெண்மை நலத்தை. பாண்
முகம் - மூக்கால் ஒலித்துப் பாடுதலையுடைய வண்டு இனம்.