3940. கல்லிய லும்மலை யங்கைநீங்க
       வளைத்து வளையாதார்
சொல்லிய லும்மதின் மூன்றுஞ்செற்ற
     சுடரா னிடர்நீங்க
மல்லிய லுந்திர டோளெம்மாதி
     வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கியேத்தி
     யிருப்பவர் புண்ணியரே.               7

     7. பொ-ரை: சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய
மேருமலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து, செருக்குற்ற
திரிபுர அசுரர்களின், பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும்
அழித்தவர். ஒளிவடிவானவர். அடியவர்களின் இடர் நீங்க, மற்போர்
பயின்ற திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். மன்னுயிர்களை
ஆளும் அரசரான அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி
வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர்.

     கு-ரை: கல் இயலும் மலை - கல்லின் தன்மை பொருந்திய
மலை, மேரு. நீங்க - (கல்லின் தன்மை) வளையாமை நீங்க. அம்மை
- அழகிய கையால், வளைத்து. வளையாதார் - செருக்குற்ற
திரிபுரத்தசுரர். சொல் இயலும் - பழிச்சொல்லுக்கு இடமாகிய, மதில்.
செற்ற - அழித்த. சுடரான் - ஒளிவடிவானவன். இடர் நீங்க -
அடியாருக்கு இடர் நீங்கும் பொருட்டு. மல் இயலும் - மற்போர்
பயின்ற. திரள் தோள் - திரண்ட தோளையுடைய. எம் ஆதி - எமது
முதல்வனும், திருவலஞ்சுழியாகிய பெரிய தலத்தையே. புல்கிய -
இடமாகக் கொண்டருளிய. வேந்தனை - அரசனுமாகிய
சிவபெருமானை. ஆன்மாக்கள் குடிகளாக அவற்றை
ஆளுந்தன்மையால் இறைவனை ‘வேந்தன்’ என்றார். “வேந்தாகி
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகி”
(தி.1.ப.130. பா.6.) என்றார் முன்னும். “அரைசே போற்றி” என்றார்
திருவாசகத்திலும் (தி.8 போற். திருவக. அடி 104).