3947. தோடொரு காதொரு காதுசேர்ந்த
 

     குழையா னிழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற
     பிறையான் மறையோதி
  நாடொரு காலமுஞ் சேரநின்றதிரு
     நாரை யூரானைப்
பாடுமி னீர்பழி போகும்வண்ணம்
     பயிலு முயர்வாமே.                   3

     3. பொ-ரை: சிவபெருமான் இடக் காதில் தோடும், வலக்
காதில் குழையும் அணிந்துள்ளவர். மார்பில் பூணூல் அணிந்துள்ளவர். ஒரு காலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நிற்பவர். பிறைச்
சந்திரனை அணிந்துள்ளவர்.வேதங்களை ஓதுபவர். ஒவ்வொரு
காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து
சேரும்படி வீற்றிருந் தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப்
பாடுவீர்களாக. உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது
வணங்குங்கள். உங்கட்கு உயர்வு உண்டாகும்.

     கு-ரை: தோடு ஒருகாது ஒருகாது சேர்ந்த குழையான் -
இடக்காதில் தோடும், வலக்காதில் குழையும் அணிந்தவன். பீடு
ஒருகால் பிரியாது நின்ற - ஒருகாலத்திலும் பெருமை நீங்காமல்
நிலைத்து நின்ற, பிறையான். பழிபோகும் வண்ணம் பயிலும் - பழி
முதலிய தீமைகள் நீங்குமாறு இடைவிடாது போற்றுங்கள்.