3956. வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
  ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        1

     1. பொ-ரை: உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக
வைத்துள்ள பரமனே! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம்
ஆதிமூர்த்தியே! வேதத்தையும், வேள்வியையும், பழித்துத் திரியும்
பயனற்றவர்களாகிய சமணர்களையும், புத்தர்களையும் வாதில்
வென்றழிக்க உம்மை வேண்டுகின்றேன். உமது திருவுள்ளம் யாது?
உலகனைத்தும் உமது புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!

     கு-ரை: வேதவேள்வி - வேதத்தையும் வேள்வியையும்.
நிந்தனைசெய்து உழல் - பழித்துத் திரிகின்ற. ஆதம் இல்லி - பயன்
பெறாதவர்களாகிய. அமணொடு - சமணர்களோடு. ஆதம் இல்லி
ஒருமைச்சொல் அமணொடு தேரரை என்ற பன்மையோடு சேர்வது
வழு அமைதியால் கொள்க. ‘ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப’
என்பதுபோல. எல்லாச் சமயங்களிலும் சொல்லப்படும் கடவுள் சிவன்
ஒருவனே ஆகவும், ஒரு சமயத்தை அழிக்கப்புகுவது அவன்
திருவுள்ளத்திற்கு ஏற்குமா? என்பதை உணர்த்த “வாதில்
வென்றழிக்கத் திருவுள்ளமே” என்று வினவுகிறார். ஆயினும் சைவ
நன்னெறி பரவுதல் இன்றியமையாமையின் ஞால நின்புகழே மிக
வேண்டும் என வற்புறுத்தியும் வேண்டுகிறார். ஆதி -
சிவபெருமானுக்குரிய பெயர்.