3966. கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு
  வாடன் மேனி யமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.            11

     11. பொ-ரை: நான்கு மாடங்கள் கூடும் திரு ஆலவாயில்
வீற்றிருந்தருளும் இறைவரை வணங்கி, உண்ணாநோன்புகளால்
வாடிய உடலைஉடைய சமணர்களோடு வாது செய்து அவர்களைத்
தோல்வியுறும் படி செய்ய இறைவரது இசைவும், அருளும் பெற்ற,
மாடங்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் பாடிய
இப்பதிக பாடல்களை ஓத வல்லவர்கள் பாக்கியவான்களாவர்.

     கு-ரை: கூடல் ஆலவாய் - இரு பெயரொட்டுப் பண்புத்
தொகை. நான்கு மாடங்கள் கூடுதலையுடைய ஆலவாய் எனினும்
ஆம். விடை கொண்டு - வாதில் வென்றழிக்க உத்தரவு
பெற்றுக்கொண்டு. வாடல் மேனி அமணர் - பட்டினி நோன்பிகள் “
உண்ணாநோன்பிதன்னொடும் சூளுற்று” என்பது மணிமேகலை.
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி பிரமா புரம்வெங் குருசண்பை
தோணி புகலிசொச்சை சிரமார் புரம்நற் புறவம் தராய்காழி வேணு
புரம் வரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே. -நம்பியாண்டார்
நம்பி.