3997. இரக்கமிஃறொழி லரக்கனாருட
       னெருக்கினான்மிகு மிழலையானடி
சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ்
     பரக்குநீள் புவியே.                    8

     8. பொ-ரை: இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான
இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த
சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிக் கமலங்களை
சிரசின்மேல் வைத்த மலர்போலக் கொண்டு, சிந்தையை
ஒருமுகப்படுத்தி வழிபடுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவர்.

     கு-ரை: இரக்கமிஃறொழில் (இரக்கம் இல் தொழில்) - “குறில்
வழி லளத்தவ் அணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம்
அல்வழியானே” (நன்னூல். 228) என்பது விதி. சிரக்கொள் பூவென
(சிரம்கொள் பூவென) - தலையில் அணியும் பூவைப்போல. எதுகை
நோக்கி சிரக்கொள் என வலித்தது. ஒருக்கினார் - சிந்தையை
ஒருமைப் படுத்தினவர்.