4032. தூணியான சுடர்விடு சோதியே
 

     சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே
     பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழூழி திரிந்துமே
     சித்தமோடு கீழூழி திரிந்துமே
காணநின்றன ருற்றது கம்பமே
     கடவுணீயிட முற்றது கம்பமே.           9

     9. பொ-ரை: அம்பறாத் தூணியாகிய நெற்றிக்கண்ணிலிருந்து
சுடர்விடும் நெருப்புப் பொறிகளை உடையவரே. அவற்றிலிருந்து
தோன்றியவரே இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சுடர்விடு
ஞானமயமான முருகக் கடவுளாவார். தம் வலிமையைப் பாராட்டி
முடி காண்பான் சென்ற பிரமன் அன்னப்பறவை வடிவு தாங்கி
ஆகாயத்திலும், திருமால் பன்றி உருவில் பாதாளத்திலும்
செருக்கோடும், கீழ்மைத் தன்மையோடும் இறைவனைக் காண
முயன்று ஊழிக்காலம் வரை திரிந்தும் அவர்கள் கண்டது அக்கினித்
தம்பமாகிய உமது வடிவத்தையே. பரம் பொருளாகிய நீ விரும்பி
வீற்றிருந்தருளுவது திருச்கச்சியேகம்பமே ஆகும்.

     கு-ரை: தூணி - அம்பறாத் தூணியாகிய நெற்றி
விழியினின்றும். ஆன- தோன்றிய. சுடர்விடு - ஒளிவீசும். சோதி -
அக்கினிப் பொறிகள். சுத்தமான - இயல்பாகவே பாசங்களின் நீங்கிய. சுடர்விடு - ஞானமயமாகிய. சோதி - முருகக்கடவுளாம். நெற்றிவிழிப்
பொறி அம்பாகநின்று காமனை எரித்தலால் நெற்றிவிழி
தூணியாயிற்று. பேணி - தன்வலிமையைப் பாராட்டி. ஓடு -
முடிகாண்பான் சென்ற. பிரமம் - பெரிய. பறவை - பறத்தலை
உடைய, பித்தனான, பிரமப் பறவை - பிரமனாகிய அன்னப்பறவை.
சேணினோடு - ஆகாயத்திலும்.(திருமாலாகிய பன்றி) கீழ் -
பாதாளத்திலும். ஊழி திரிந்து - ஊழிக்காலம் திரிந்து. சித்தமோடு -
தங்கள் மனச்செருக்கோடு. கீழ் - தங்கள் கீழ்மைத் தன்மையும். ஊழி
- முறையே. திரிந்து - மாறுபட்டு. காண நின்றனர் - உம்மைக் காண்
நின்ற அவர்கள். உற்றது - கண்டது. கம்பமே - அக்கினி
ஸ்தம்பமாகிய உமது வடிவத்தையே. ஊழ் - முறை. ஊழ்+இ=ஊழி,
முறையையுடையது. வினைமுதற் பொருள்விகுதி.