4070. சீருறு தொண்டர் கொண்டடி போற்றச்
       செழுமலர் புனலொடு தூபந்
தாருறு கொன்றை தம்முடி வைத்த
     சைவனார் தங்கிட மெங்கும்
ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி
     யொலிபுனல் கொளவுடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க
     கழுமல நகரென லாமே.                3

     3. பொ-ரை: பெருமை மிக்க சிவதொண்டர்கள் நறுமலரும்,
நீரும், தூபமுங் கொண்டு திருவடிகளைப் பூசிக்கும்படி, கொன்றை
மாலையினைத் தமது திருமுடிமேல் வைத்தருளிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, பலவூர்களைத் தம்பாற் கொண்டுள்ள
பதிகளை உலகுடன் கொள்ளும்படி கடல் பொங்கி எழுந்தபோது திருவருளால் தோணிபோல் மிதந்து மழையினாற் பெறும் நன்மைகள்
குறைவறச் சிறந்துள்ள திருக்கழுமலநகர் எனலாம்.

     கு-ரை: சைவனார் - சிவனுக்கு ஒரு பெயர். ஊர் உறுபதிகள்
- பல ஊர்களுக்குத் தலைமையாய் உற்ற நகரங்கள். கார் உறு
செம்மை - பருவ காலத்தில் பெய்யாதொழிதலும் மிகுமழைபும்
குறைமழையும் இல்லாமையுமாம்.