4082. தாங்கருங் காலந் தவிரவந்திருவர்
       தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினாற் றரித்துப் பண்டுபோ லெல்லாம்
     பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
     செண்பகம் வண்பலா விலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயிற்புகா வீழி
     மிழலையா னெனவினை கெடுமே.        4

     4. பொ-ரை: மகாசங்கார காலத்தில் திருமால், பிரமன் ஆகிய
இருவரின் எலும்புகளை அழகுற அணிந்து, பின் முன்பு போல்
மீண்டும் எல்லாம் படைத்துத் தொழிலாற்றும் நெற்றிக்
கண்ணுடையவர் சிவபெருமான். அவர் கமுகு, தென்னை, மா,
செண்பகம், பலா, இலுப்பை, வேங்கை, மகிழ், ஆல் முதலியன
சேர்ந்த வெயில்புகாத சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவார். அப்பெருமானுடைய திரு
நாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.

     கு-ரை: வெயில் புகா - மரங்களின் அடர்த்தியால் வெயிலும்
நுழையாத சோலை. “வெயில் நுழைபு அறியாக்குயின் நுழை
பொதும்பர்” (மணிமேகலை, பளிக்கறை புக்க காதை அடி. 5) தாங்க
அரும் காலம் - மகா சங்காரகாலத்தில். தவிர - தம் தொழிலும்
நீங்க, இருவர் தம்மொடுங் கூடினார். பிரமன் திருமால் இடத்தும்
திருமால் உருத்திர பகவானிடத்திலுமாகக் கூடினார்.
ஒடுங்கினவர்களாகிய அவ்விருவரின், அங்கம் - எலும்புகளை.