4091. வெற்றவே யடியா ரடிமிசை வீழும்
       விருப்பினன் வெள்ளைநீ றணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய
     குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ
     னுலகினி லியற்கையை யொழித்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற
     வாலவா யாவது மிதுவே.               2

     2. பொ-ரை: பற்றற்ற உள்ளத்தோடு, சிவனடியார்களைக்
காணும்போது கீழே விழுந்து அவர் திருவடிகளை வணங்கும்
பக்தியுடையவரும், திருவெண்ணீறு திருஞானசம்பந்தரால் பூசப்பெறும்
புண்ணியப் பேறுடையவனாகிய பாண்டிய மன்னனுக்கு
அமைச்சருமாகிய குலச்சிறை நாயனார் மகிழ்வோடு வணங்கித்
துதிக்கும் சிவபெருமான் ஒப்பற்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக
உடையவர். தேவர்களின் தலைவர். உலகியல்புகளை வெறுத்து
அகப்பற்று, புறப்பற்று ஆகியவற்றைக் கைவிட்டுத் தம்மையே கருதும்
அன்பர்க்கு அன்பராய் விளங்குபவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவேயாகும்.

     கு-ரை: வெள்ளை நீறணியும் கொற்றவன் தனக்கு மந்திரி:-
இதனால் அரசன் சைவத்தினின்று சமணம் புக்கமை அறியலாகிறது.
ஒற்றை - ஒப்பற்ற. அற்றவர்க்கு - அகப்பற்றும் புறப்பற்றும் விட்டுத்
தன்னையே கருதும் அன்பர்க்கு. அற்ற - தானும் அத்தகைய அன்பு
உடைய (சிவன்). அற்ற என்பது அன்புடைய என்னும்
பொருளதோ?