4094. செய்யதா மரைமே லன்னமே அனைய
       சேயிழை திருநுதற் செல்வி
பையரா வல்குற் பாண்டிமா தேவி
     நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசமங் குசமான்
     விரிகதிர் மழுவுடன் றரித்த
ஐயனா ருமையோ டின்புறு கின்ற
     வாலவா யாவது மிதுவே.               5

     5. பொ-ரை: சிவந்த தாமரைமலர் மேல் வீற்றிருக்கும்
இலக்குமி போன்று அழகுடையவரும், சிறந்த ஆபரணங்களை
அணிந்துள்ளவரும், அழகிய நெற்றியையும், பாம்பின் படம் போன்ற
அல்குலையும் உடையவருமான பாண்டிமாதேவியாராகிய
மங்கையர்க்கரசியார் நாள்தோறும் மனமகிழ்வோடு வழிபாடு செய்து
போற்ற, வேல், சூலம், பாசம், அங்குசம், மான், மழு ஆகியவற்றைத்
தாங்கியுள்ள சிவபெருமான் உமாதேவியோடு இன்புற்று
வீற்றிருந்தருளுகின்ற திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே.

     கு-ரை: செய்யதாமரைமேல் அன்னம் - இலக்குமி. (முதற்
பாட்டில் பங்கயச் செல்வி என்பதுவும் காண்க.)