4101. இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை
       யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர்
     காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க்
     கோவணங் கொண்டுகூத் தாடும்
படிறனார் போலும் பந்தணை நல்லூர்
     நின்றவெம் பசுபதி யாரே.              1

     1. பொ-ரை: திருப்பந்தணைநல்லூர் என்ற திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பசுபதியாராகிய சிவபெருமான் காலனை உதைத்து
அழித்தவர், அசுரர்களின் முப்புரங்கள் பொடியாகும்படி எரித்தவர்,
என்பன போன்ற புகழ்மொழிகளாகிய இவற்றைச் சொல்லி
உலகத்தவர் மிகவும் துதிக்கும்படியாகக் காட்டில் உள்ளவராவர்.
காற்றில் எங்கும் கலந்துள்ளார். உறுதிப்பாடுடையவர். எதனாலும்
குறைவில்லாதவர். கோவணம் தரித்துக் கூத்தாடும் வஞ்சகரும்
ஆவார்.

     கு-ரை: கடறு - காடு. கொடிறனார் - உறுதியானவர்.